Tuesday, November 14, 2017

நிலவு ததும்பும் நீரோடை

கவிதை தேடி என்னுள் நுழைந்த
கனவுகளெல்லாம்
காய்ந்து திரும்பின
வெடிக்காத மூங்கில் பாளையில்
மோதி மோதி நொந்து
திரும்பும் காற்றைப்போல

அவசர வாழ்வின் சிடுக்குகளில்
மெல்ல... மெல்ல....
என்னைத் தொலைத்திருந்த நான்
உன்னை அள்ளி
என்னுள் ஊற்றிக் கொண்டேன்
உன் அனுமதி இன்றியே!

விழிகளை சற்றே மூடி
என்னுள் இறங்கி
மனதின் மர்ம முடுக்குகளில்
சஞ்சாரம் செய்கிறேன்

அங்கே
காலியாய் இருந்த
கோப்பைகள் எல்லாம்
நிரம்பி வழிகின்றன

மனதில் எழும்
ஞாபக அலைகளை எல்லாம்
பௌர்ணமியாய் ஏன்
நீயே இழுக்கிறாய்?

உறக்கம் மறந்த இரவின்
நிசப்தத்தைக் கூட
உன் சொந்தமாக்கி விட்டாய்!

நொடிக்குள் யுகங்களை
சிறைவைத்த என்
அன்பு ஸகியே...

நினைவு ஓடையின்
சிறு சிறு சிலும்பல்களும் தழும்பல்களும்
உன்னிடமே துவங்கி
உன்னிடமே முடிகின்றன.

- பஜிலா ஆசாத்
புத்தகம் : நிலவு ததும்பும் நீரோடை.