சாலைகளுக்குத் தெரியாது
நீ சாதிக்கப் பிறந்தவன் என்று!
விரைந்து செல்லும்
வாகனங்களுக்குத் தெரியுமா?
நீ தான் எங்கள் வீட்டின்
விடியலென்று......
முந்திச்செல்லும்
முன்னோடிகளுக்குத் தெரியுமா?
நீ தான் எங்கள்
வீட்டின் முகவரி என்று.......
கடந்து செல்லும்
கனரக வாகனங்களுக்குத்
தெரியுமா?
நீ தான் எங்கள்
கண்மணி என்று.,.....
விடியலும்
விலாசமுமாய்
நம்பிக்கையும் எதிர்காலமுமாய்
நம்பியிருக்கிறோம்
உன்னை......
ஐந்து நிமிடங்கள்
காத்திருந்து அடுத்து வரும்
பேருந்திற்காக காத்திருக்க
முடியாத உனக்காக
நீ பிறந்த நாள் முதல்
இன்று வரை காப்பாற்றுவாயென்று
காத்திருக்கிறோம்.....
காலமெல்லாம்
உடனிருப்பேனென்று
கட்டிய தாலி நினைவிருக்கிறதா..
கண்ணாளா?
காத்திருப்பேன் கடைசிவரை
விரல் பிடித்து
நான் நடந்து
கரை தாண்டவும்,
கடல் தாண்டவும் கற்றுக்கொண்ட
உன் நிழல் நான் தந்தையே!
விழித்திருப்பேன்
நீ வரும் வரை...,..
அலுவலகத்திற்குத் தானே
சென்றிருக்கிறாய்;
அப்படியே திரும்பி வருவாயென்று
காத்திருக்கிறோம்
உடையாமலும்
உரசாமலும்
கவனமுடன்
திரும்பி வா!
நீ செல்லும் பாதைகள்
உனக்கு வெறும்
பயணமாக இருக்கலாம் ;
காத்திருக்கும் எங்களுக்குத்தான்
தெரியும் காலனிடம்
போராடிக்
கொண்டிருக்கிறாய்
என்று......
அம்மாவும்,
அப்பாவும்
தம்பியும்,
தங்கையும்
மனைவியும்,
மகளும்
மகனும் என வாழக்கிடைத்த
இந்த வாழ்க்கை
ஒரு வரமென்று
உணர்ந்து கொள்ளுங்கள்!
தொங்கிச் செல்வதும்
துரத்திச் செல்வதும்
உங்கள் குருதியின்
வேகமாக இருக்கலாம்;
ஆனால், விபத்துகளிலிருந்து
எப்போதும் தப்பித்து விடமுடியாது!