குப்பத்துச் சுப்பனுக்குக்
கொள்ளைக் கோபம்,
கற்றிவந்த அலுப்பதனால்குடித்திட்ட கூழதுவும் வேகவில்லை. கடித்திட வெங்காயம் தானு மில்லை. கேட்டதற்குக் குப்பி தந்த பதிலிலே உப்பில்லை, சப்பில்லை, ஒப்ப வில்லை மாடாக நான் உழைத்து வீடு தேடி மண்தின்னத் தான்வர வேண்டு மோடி! வரவர உன்புத்தியுமே பாழாய்ப் போச்சி. வாயினிலே வந்ததென்ன புத்து தானோ! வெண்ணெய் உருக்கினது வேலைவெப்பம் தீர்த்துவிடும். இன்னும் இரண்டு கரண்டி போட்டுச் சாப்பிடுவீர்! இன்மொழி இதனைக் கேட்டு எரிச்சல் மிகவும் கொண்டு, என்ருசியை நானறிய இருக்கு தெனக்குப் புத்தி கொஞ்சம். எனக்கோபம் காட்டுகிறார் எல்லம் மாவின் கணவர். சூடாகப் பேசுகிறார். குப்பத்து ஆண்களுந்தான் தப்பேதும் செய்தனரோ? எப்பாடு படுகின்றார் இராப்பகலாய்ப் பாவம், எல்லாம் நம்குடும்பம் ஏற்றம் பெறுவதற்கே. உருசி எதிலே இவர்க்கு என்று கண்டறிய வேண்டுமினி. இஞ்சி பச்சடியோ? எலுமிச்சம் பழச்சாறோ? உருளை வருவலோ? கருணை கூட்டதுவோ? மோர்குழம்பும், வடையும் மொச்சை மசியலுமோ? வெண்டையோ? முருங்கையோ! பிஞ்சுக் கத்திரியோ? ஏதவர்க்கு ருசிதருமோ? இனிநாம் கண்டறிவோம் எல்லம்மாள் இந்தவிதம் எண்ணமிட்டாள். அவர் 'ருசி'யை அவள் அறிய முடியுந்தானோ?! கருத்த மேனியது, உழைப்பால் மெருகேறி, கந்த லாடையது இளமைக் குறிகாட்ட, மடுவில் குறித்தவளும், மானாக ஓடுகிறாள். மார்பைத் துளைத்திடுது மாபாவம் தரும்எண்ணம். எப்படியேனும் இவளைக் கைப்பிடித்தாக வேண்டும், ஆசைநோய் வளரு மானால், ஆள்உருகிச் சாவாராம். ஆகையினால் உயிர்ப்பிச்சை அவளாலே பெறவேண்டும். எத்தனையோ பெரிய இந்த உலகமதில் என்போல்வார் இல்லையோ? எவ்வளவோபேர், வல்லோர். இந்தவிதமாக எண்ணமிட்ட கண்ணப்பர். ஆனமட்டும் பார்த்திடுவேன் மாந்தோப்பு வேலையைநான் ஆள்கூட்டிக் கொண்டுபோய் அறுவடை தனைக்கவனி, மாடுகண்ணு கார்த்திடட்டும், மாரியா? பெயரென்ன? குப்பி! ஏற்பாடு இதுஎன்று கண்டானா சுப்பனவன், காற்றனான். சுள்ளிகளைப் பெறுக்கிச் சொகுசாகக் கட்டாக்கி, வாலைப் பருவத்தால் வந்திடும் குலுக்குடனே குப்பிநடை நடந்தாள் வீடு போக. ஓகோகோ! நடப்பதிது எத்தனை நாட்களாக? உனக்காகத் தானோ மாந்தோப்பும் அதில்உளதும்! கண்ணப்பர் கேட்கின்றார், கடுங்கோபம், கண்ணில் இல்லை! போ! போ! அக்குடிசையிலே போட்டுவிடு சுள்ளிகளை என்றார். இப்படி ஆகுமென்று அறிந்திருந்தால் கனிந்து குனிந்து சுள்ளி குவித்திருக்க மாட்டேனே. செல்வம் குவித்திருக்கும் சீமான் இவருக்கு, என்னகுறை வந்துவிடும். இந்தச்சுமை போனால்! சுள்ளியுடன் கவலையையும் சுமந்துசென்று குப்பி குடிசையிலே போட்டுவிட்டு, குறைமனதாய்த் திரும்புகையில், பச்சைச் சிரிப்புடனே, ஆங்கு நிற்கின்றார் கண்ணப்பர். வந்தது மோசமென்று வண்டாடு விழியாள் கண்டு கொண்டாள், கடுங் கோபம் அவளுக்கு. கால் தட்டிவிடலாமா காட்டுக் கூச்ச லிடலாமா. கட்டையால் தாக்குவதா? கல்வீசிக் கொல்லுவதா? என்ன செய்திப்போது இம்சையைத் தடுப்பது நான், என்று ஏதேதோ எண்ணுகிறாள் குப்பி, கதிரவனோ மறைகின்றான். ஊருக்குப் பெரியவராம் உண்மை நீதி அறிந்தவராம். ஏருக்கு மாடாக உழைக்கும் ஏழைக்குக் கூற்றாவார். பெண்பித்துக் கொண்டலையும் பேயனெனத் தெரிந்திருந்தால், பொன்விறகு கிடைத்தாலும் புகுவேனோ மாந்தோப்பு! பாம்பு சீறுமுன் பசுப்புல் வெளியதுவும் பாங்குதான், அதுபோல பாவி இப்பார்வை காட்டு முன்னே என்தந்தைபோல் தெரிந்தார். குப்பியைத் தொட்டிட அவர்நெருங்கு கிறார் தப்பிவிடுவது எனஅவள் தாவுகிறாள். ஒருபிடி! ஒருதள்ளு! அடப்பாவி! குப்பி! குப்பி! இவ்வளவே!! பாய்ந்தோடு கின்றார் பதைத்து. சாய்ந்து கிடக்கிறார் சீமான். இது நடந்து ஆயின நாட்கள் இரண்டு. மூச்சு விடவில்லை குப்பி, பயம் மூளையைக் குழப்பியது. கண்ணப்பர் ஊரில்இல்லை கழுகுமலை சென்றிருந்தார். சொன்னால் கணவன் நம்புவானோ? சொகுசு உனக்கேன் என்பானோ? எட்டி அரிவாள் அவன் தலையை எடுத்து வருகிறேன் என்பானோ? எத்தனை விபத்து வந்திடுமோ? என்றஞ்சி வாயும் திறக்கவில்லை. இந்நிலையில் கூழுந்தான் வேகுமா? கொடுத்திட வெங்காயமும் கிடைக்குமா? கோபம் கொதித்தது குப்பிக்கு! யார்மீ ததனைக் காட்டிடுவான்? சூதுசெய்தவன் மாளிகையில், இவளிருப்பதோ குப்பத்தில்! பெத்தவன் மீதே குப்பி மெத்தவும் கோபம் கொண்டாள். எத்தனை சொல்லியும் கேட்கவில்லை இந்நிலைக் கவனே காரணமாம்! ஊழியம் செய்திங்குப் பிழைப்பதிலே உண்டோர் ஆயிரம் கேடப்பா! உதவிடு பணம்ஒரு முன்னூறு வாங்குகிறேன் பசு பசிபோக்க, பாலும்மோரும் விற்றிடுவோம். பாவியிடம் போய்ப்பணி புரியோம். அந்தப் பணம் அவர்தந் திருந்தால் இந்தக் கதியும் வந்திடுமா? இந்தக் போபம் குப்பிக்கு! இனமறியாக் போபம் சுப்பனுக்கு. பறிக்கச் சென்றவர் முன்கண்டார்; பதறிச் சீறினார் கண்ணப்பர். ஒரேவெட்டு! வீழ்ந்துவிட்டான் என்றே கூறி ஓடோடி வீடு நுழைந்தான் சுப்பன் அறிவா ளோடு! அய்யய்யோ! யாரைநீ கொன்று போட்டாய்? காம வெறிப்பேய் கண்ணப் பனையா? பதறிக் கேட்டிடும் குப்பிக்குச் சுப்பன் கூறிடுவான் பதிலும். கண்ணப்பர் தங்கக் கம்பி. தாக்க வந்தான் சொக்கனுமே கடனாம், வழக்காம், ஏதேதோ கோபம்வெறி அவனுக்கு. பக்க மிருந்தேன் குப்பி!நான் பாவியைத் தீர்த்துப் போட்டு விட்டேன். எதைஎண்ணி அழுவாள் குப்பியுமே எத்தனை தாங்கும் அவள் மனமும்? கொலையாச்சே, போலீஸ்? என்றாள். தொலைதூரம் ஓடிப்போவேன் என்றான். ஆறு ஆண்டுகள் கடுங்காவல் அளித்தார் நீதி மன்றத்தார். சிறையில் சென்று பார்த்திடுவாள்; சித்தம் உருகி அழுதிடுவாள், சந்தியசந்தர் எஜமானர் காப்பா ரென்றவன் தேற்றிடுவான். மாந்தோப்பில் முன்போல் வேலை செய்தால். மகராசன் வார்த்திடுவான் கஞ்சி என்றான். எப்படி அவள் உண்மை செப்பிடுவாள்? ஒப்பிடுமா அங்கு வேலை செய்ய. ஆலையில் கூலி கிடைத்திடுமாம் ஆறுமுகம் சொன்னார் சேருகிறேன். எனக்கூறினாள் குப்பி, சென்னை வந்து விட்டாள். கோபம் மிகக்கொண்டான் சுப்பனுமே! சோரம் போனாள் குப்பி என்றெண்ணி. கோபம் அவரவர் கொள்கின்றார், யாரவர்க்குண்மை கூறுகின்றார்! |
படித்ததில் சிலவற்றை திரும்பி படிக்க தோன்றும் சிலவற்றை பகிர்ந்து கொள்ள தோன்றும் இந்த இரண்டும் நிறைவேற இங்கே இணைகிறேன் உங்களுடன்.
Friday, September 30, 2016
கோபம் - அண்ணாவின் கவிதை
Tuesday, September 27, 2016
கணவனான காதலன்
தொலைந்து போன காதலனை
தேடுகிறேன் கணவனிடம்
காதலியை தொலைத்து என்னில்
மனைவியை தேடும் அவன்
மன்னிக்க வேண்டும்
அவரென்று அழைக்க உத்தரவு.
முதல் ரசிகையாம்
உன் கவிதைகளுக்கு
காதலிக்கும் போது
இன்றோ முகவரியாம்
உன் கவலைகளுக்கு
கல்யாணத்திற்கு பிறகு
எப்படி சிந்திக்கலானாய் நீ !!!
உன் அம்மாவிற்க்கு மருமகளானேன்
உன் மகளிற்க்கு அம்மாவானேன்
உனக்கு மட்டும் மனைவியானலும்
காதலியாய் தொடர விழைகின்றேனே
உனக்கு புரிகிறதா??
காதலுக்கு இருவரும் பொது
கல்யாணத்திறக்கு பிறகு
கணவன் மட்டும் உயர்வெனும்
அடிமை விலங்கு உடைக்கும்
முற்போக்கு காதலனாய் வருவாயா...
கணவெனும் முகமூடியிட்டிருக்கும்
காதலனே மீண்டு வா
மனைவியெனும் மாயவலையிலிருந்து
காதலியை மீட்டு போ....
------பால முருகன் !!!!!!
Wednesday, September 21, 2016
கருவறை வாசனை
அன்புள்ள அம்மா ,
கடவுளின் மடியில்
விளையாடிக் கொண்டிருந்தேன்.
கோவிலைக் காண்பிப்பதாகச் சொல்லி ,
என்னை ,
உன் கருவறைக்குள் பிரவேசிக்கச் செய்தார் , கடவுள் !
இருட்டாக இருந்தாலும் ,
இதமாக இருந்தது இந்தப் புதிய இடம்..
முதலில் பயமாக இருந்தாலும் ,
பிறகு சந்தோஷமாக வளரத் தொடங்கினேன் !
நீ சிரிக்கும் பொழுது ,
நானும் சிரித்தேன்..
நீ அழும் பொழுது ,
நானும் கண்ணீரில் ...
பிறகு தான் புரிந்தது
நம்மிடையே ஒரு புது உறவு மலர்ந்தது என்று ...
ஆமாம்
நீ என் அம்மா !
"அம்மாவும் நான் தான் "
- கடவுள் சொல்லி இருக்கிறார் !
இன்னொரு கடவுள் அம்மாவா - இல்லை
அம்மா இன்னொரு கடவுளா ?
தெரியவில்லை ...
இப்படி பல விஷயங்களை
யோசித்துக்கொண்டே வளர்ந்தேன் !
உன்னை பார்க்க வேண்டும் போல் இருந்தது ,
ஏனென்றால் நீ கடவுளின் சாயல் !
அப்பொழுது தான்
ஒரு தீராத வலி என்னை ஆட்கொண்டது ,
ஒரு அரக்கன் என் உடலசைவுகளைச் செயலிழக்கச் செய்தான் ...
ஓரிரு நிமிடங்களில் என் போராட்டம் தோல்வியில் முடிந்தது ।
நான் கொஞ்சம் கொஞ்சமாக உயிர் இழந்தேன் ॥
உன்னை பார்க்கமலே
உன்னை பிரிகிறேன்...
எனக்கு பிடித்தமான அந்தக் கோவிலை விட்டும்...
உன்னோடு விளையாட ஆசைப்பட்டேன்
என் பிறப்பே விளையாட்டாகப் போய்விட்டது
அந்த வெளிச்சத்து வாசிகளுக்கு ...
மீண்டும் அதே கடவுளின் மடியில் ..
அதே விளையாட்டுக்கள் தான் ...
புதியதாக இன்னொரு ஆசையும்..
மீண்டும்அதே இருட்டறையில் ,
உன் அன்பு மகளாக உலா வர வேண்டும் ...
மீண்டும் நுகர வேண்டும் ,
உன் கருவறை வாசனையை ...
இப்படிக்கு ,
பிறவாத உங்கள்
குட்டிப்பாப்பா :)
- கனிமொழி
