Saturday, April 6, 2024

சுருங்கி போன உலகில்

மழைக்காக எங்கும் 
மரங்கள் பூமியெங்கும் 

அன்புக்காக எங்கும் 
மனிதர்கள் வீடுதோறும்

வெளியில் விளையாட
ஆட்களீன்றி பிள்ளைகள் 

உறவுகள் உதவாதா என
காத்திருக்கும் உள்ளம் 

இப்படி பெருகி 
கிடக்கின்றன எல்லாம்
சுருங்கி போன உலகில்.  
 



Friday, June 30, 2023

சுதந்திரமே சிறை

சிறைக் கம்பிகளுக்குள்
வாழப் பழகிக் கொண்டவனுக்கு
இப்போது சுதந்திரமே
சிறையாக தோன்றுகிறது

Monday, August 31, 2020

மண்ணில் நீயும் உள்ள நாள்வரை

அன்பே அன்பே உனக்காக நான் ஏங்குவேன் மண்ணில் நீயும் உள்ள நாள்வரை வாழுவேன் கண்ணே உன் கண்ணீரல்ல என்னோட உதிரம் அது பெண்ணே உன் புன்னகையில் என் ஆரோக்கியம் உள்ளது நீயில்லாமல் நானும் நெடுநாளாய் வாடும் தனித்து விட்ட ஓடம் தவிக்கிறேன் எந்நாளும் இதயம் இடைவிடாமல் உனக்காக துடிக்கும் உதயம் உனக்காக உறங்காமல் விழிக்கும்

Wednesday, October 9, 2019

கல்யாணத்திற்கு பிறகு

காதலிக்கும் போது
காதில் தேனாய்
ஒலித்த என் குரல்
கசந்தது ஏனோ உனக்கு
கல்யாணத்திற்கு பிறகு
வேப்பங்காயாய்......

என் உலகமே நீதான்
உறவுகளை தூக்கி எறிந்து
உன்னை நம்பி வருவேன்
 உரைத்த நீயோ இன்று
உன் குடும்பத்தை
நான் மதிக்கவில்லை என்று
போவதும் ஏனோ
என்னை தூக்கி எறிந்து

எல்லாமே மாறிவிட்டது
எதற்க்காக முன்பு சிரித்தாயோ
அதற்காக அழுகிறாய் இன்று

பேசுவது எல்லாம்
பிரச்சனையில் முடிகிறது

காதலர்களாகவே இருந்திருக்கலாமோ
கடைசி வரை
கல்யாணம் எனும் மாற்றத்திற்கு
ஆசைப்பட்டு
மாறிபோனது நாம்தான்



Friday, April 13, 2018

மழை நாட்கள்

முன்னர் எல்லாம் 

மழைக்காலம்

 என்ற ஒன்று.... 

இருந்தது.

இப்போது....

 மழைநாட்கள் மட்டுமே !

  - படித்ததில் பிடித்தது.

Tuesday, November 14, 2017

நிலவு ததும்பும் நீரோடை

கவிதை தேடி என்னுள் நுழைந்த
கனவுகளெல்லாம்
காய்ந்து திரும்பின
வெடிக்காத மூங்கில் பாளையில்
மோதி மோதி நொந்து
திரும்பும் காற்றைப்போல

அவசர வாழ்வின் சிடுக்குகளில்
மெல்ல... மெல்ல....
என்னைத் தொலைத்திருந்த நான்
உன்னை அள்ளி
என்னுள் ஊற்றிக் கொண்டேன்
உன் அனுமதி இன்றியே!

விழிகளை சற்றே மூடி
என்னுள் இறங்கி
மனதின் மர்ம முடுக்குகளில்
சஞ்சாரம் செய்கிறேன்

அங்கே
காலியாய் இருந்த
கோப்பைகள் எல்லாம்
நிரம்பி வழிகின்றன

மனதில் எழும்
ஞாபக அலைகளை எல்லாம்
பௌர்ணமியாய் ஏன்
நீயே இழுக்கிறாய்?

உறக்கம் மறந்த இரவின்
நிசப்தத்தைக் கூட
உன் சொந்தமாக்கி விட்டாய்!

நொடிக்குள் யுகங்களை
சிறைவைத்த என்
அன்பு ஸகியே...

நினைவு ஓடையின்
சிறு சிறு சிலும்பல்களும் தழும்பல்களும்
உன்னிடமே துவங்கி
உன்னிடமே முடிகின்றன.

- பஜிலா ஆசாத்
புத்தகம் : நிலவு ததும்பும் நீரோடை.

Thursday, September 7, 2017

கைவிடுதல்

உன்னை கைவிட வேண்டுமெனறால்
உன்னைப் பற்றிய இல்லாத ஓர் அவதூறை
நம்பியாக வேண்டும்
உன் தரப்பு நியாயத்தை சகட்டுமேனிக்கு
ஏளனப்படுத்த வேண்டும்
இன்னும் கீழ்தரமாய் இறங்கி
சில அத்தியாயங்கள் படைக்கும் வேண்டும்
என் மீதான நம்பகத்தன்மையை
உன்னிடமிருந்து வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்
உன்னைக் கைவிடுதல் என்பது
அத்தனை எளிதான ஒன்றல்ல
ஆயினும் நான் உன்னிடமிமும்
நீ என்னிடமும்
மாயையைப் போலாகும் வரை விடுவதாயில்லை
கைவிடுதல் எனும் ஓர் அத்தியாயத்தை.

- கோ. பகவான் (குங்குமம் இதழில்).